Saturday, November 9, 2019

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாள் . ...

புதுச்சேரி ராமன் திரை அரங்கம் காலை 5  மணிக்கே  களை  கட்ட தொடங்கி விட்டது . ஊரெங்கும் திருவிழா கூட்டம் . சிவந்த மண் வெளியாக உள்ள நாள்.
நான் ஆறுமணிக்கு  திரை அரங்கம் நோக்கி  நடக்கிறேன் . இன்றுவரை அப்படி ஒரு ஜனத்திரள் நான் கண்டதில்லை. போட்டி போட்டுகொண்டு ரசிகர் மன்றத்தினர்  வண்ண வண்ண அலங்காரங்கள்  கட்  அவுட்டுகள்  வைத்திருந்தனர்.  கண் கொள்ளா காட்சி என்பார்களே அதுதான் .  ஒரு பக்கம்  வாத்தியம்  முழங்குகிறது .  மறு  பக்கம் பட்டாசு  சத்தம் . இன்னொருபுறம் ரசிகர்களின்  ஆனந்த கூக்குரல்கள் .  திரை அரங்க வளாகம் நிறைந்து  வீதிகளில் கூட்டம் குவிய தொடங்கியது . முன் பதிவெல்லாம் கிடையாது. புதுவை எப்போதும்  நடிகர்திலகத்தின் கோட்டை . பதிவு  பெற்ற  மன்றங்களோ . நூற்றுக்கணக்கில். தங்களின் சொந்த பணத்தை போட்டு  கட்  அவுட் வைத்திருந்தவர்கள்  முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டுக்கு காத்திருந்தார்கள்.  சிவாஜி மன்ற நிர்வாகிகளோ  முதல் காட்சி டிக்கெட்டை  யார் யாருக்கு கொடுப்பது   என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தார்கள். எப்போதுமே முதல் நாள் முதல் காட்சி பார்த்து
 விடும் எனக்கு  சற்று பயம் தொற்றிக்கொண்டது.  இன்னிக்கு நாம் படம் பாக்க முடியாது  என்ற காரணம்தான் .

இது ஒரு புறம் இருக்க  அந்த நடிகரின் படம் இரண்டு நாளுக்கு முன் வெளிவந்தது . அவர்கள் வேறு நமது படத்திற்கு எதிராக செய்தி பரப்பி கொண்டிருந்தார்கள்.  படம் வரலை படம்  வராது.  என்று. .

புதுவையில் ஒரு வழக்கம்  புதுப்படம் வரும்போது படப்பெட்டியை  மணற்குள விநாயகர் கோயிலில்  வைத்து பூஜை செய்து விட்டுத்தான் வருவார்கள் . அதனால் படம் வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்ள கோயில் வாசலில் திரளாக ரசிகர்கள்.  திடீரென்று பொ ட்டி வந்துவிட்டது என்று  ஒரு குரல் எங்கேயோ கேட்க  அவ்வளவுதான். என்ன நடந்தது என்று தெரியவில்லை அத்தனை கூட்டம் ஒரே நேரத்தில்  திரை அரங்கில் நுழைய  காவல் துறையும் திரை அரங்கு நிர்வாகமும் ம் சிவாஜி மன்ற நிர்வாகிகளும்  செய்வதறியாது திகைத்து  நிற்க  எங்கேயோ நின்ற நான் திரை அரங்கின்  உள்  புறத்தில் இருந்தேன் .  பின் காவல் துறை யின் ஆலோசனைப்படி உள்ளிருந்தவர்களை  அப்படியே விட்டு விட்டு  வெளியில் இருந்தவர்களை கலைஃ ந்து போக செய்தார்கள்.   பெயருக்கு சில டிக்கெட்டுகள் மட்டும் கொடுத்து விட்டு  உள்ளெ  இருந்த எங்களுக்கு  உள்ளேயே டிக்கெட்டுகள்  வழங்கினார்கள்.  படம் முதல் காட்சி பார்த்தாகி விட்டது.

அன்று படம் பாக்க வந்தவர்களுக்கு  ரசிகர்கள்  கை  விசிறி , சென்ட் கார்ட் (வரவேற்கிறோம் என்ற கார்டில்  சென்ட் வாசனை அடிக்கும்)  சிறு பாக்கெட்டில் சக்கரை  லட்டு  என்று அசத்தினார்கள் . 

ஐம்பது ஆண்டுகள் சென்ற பின்னும் அந்த இனிய நினைவுகள்  மாறவே மாறாது.   அப்படி ஒரு காலம் இனி வருமா என்று நினைக்கும் போதுதான் கர்ணன்  திரும்ப வந்தது. இப்போது வசந்த மாளிகை.  திலகமே காலத்தின் முன்னே நீங்களும் நாங்களும் வேறல்ல.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் உற்சாகம் மாறவே மாறாது.

நடிகர் திலகம் அவர்களின்     தர்பார்      ஐம்பது  ஆண்டுகளுக்கு முன்பே  தொடங்கி விட்டது.    வெற்றிக்கான     பிகில்   அவரால் எப்போதோ ஊதப்பட்டுவிட்டது.   . 

அன்புடன் சாய் ஜெயராமன் .. புதுச்சேரி. 

No comments:

Post a Comment