Friday, January 16, 2015

காணும் பொங்கல்

நினைத்தாலே இனிக்கும்


இதோ அமைதியாக  அமர்ந்திருக்கிறேன்.  வயதானதாலோ , நேரம் கிடைப்பதினலோ  என்னவோ  இப்போதெல்லாம் எனக்கு   பழைய நினைவுகள்  அடிக்கடி வருகிறது. அதை அசை போடுவதிலும் ஒரு சுவை இருக்கிறது.

வாசலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒரு மொபெட்டில்  ஒருவர்  சில கடிதங்களை  சில வீடுகளின் உள்ளே விட்டெறிந்து விட்டு போனார்.  அநேகமாக  எல்லார் வீடும் கதவு  சாத்தியே இருந்தது..  அவர் யாராக இருக்கும்.  கொரியர்  கம்பனியை  சேர்ந்தவராக இருப்பாரோ ? அல்லது தபால் காரராக இருப்பாரோ.

எழுபதுகளில். அதாவது எங்களது பதின்  வயதுகளில்  தபால்காரர்  எப்போது வருவார் என்று காத்திருப்போம். காரணம்  பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
உறவினர்களிடமிருந்து , நண்பர்களிடமிருந்து  சமயத்தில் நாங்களே எங்கள் சகோதரர்களுக்கு  அனுப்பிய பொங்கல் வாழ்த்துகளை  எதிர் பார்த்து காத்திருப்போம்.  நமது பெயருக்கு வாழ்த்து அட்டை வரும்போது  ஏதோ நாம்தான் உலகத்தின் உச்சியில் இருப்பது போன்ற மன நிலை  தோன்றும்.
காக்கி சட்டை அணிந்த  தபால்காரர்  மெதுவாக நடந்து வருவார். ஏறைக்குறைய அணைத்து வீடுகளுக்கும் தபால் இருக்கும்.  கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல்  தபால் பட்டுவாடா செய்வர்.

காணும் பொங்கல் அன்று முதல் மரியாதை தபால் கரருக்குத்தான். இரண்டு பேர் வருவார்கள்  ஒருவர்  மணி ஆர்டர்  கொடுப்பவர்  மற்றோவர் தபால் பட்டுவாடா செய்பவர். வெற்றிலை பாக்கு பழம்  மற்றும் ஐந்து ரூபாய் பணம் வைத்து அவருக்கு கொடுப்போம். அவர்களும் புண் முறுவலுடன் ஏற்றுகொள்வார். நிச்சயமாக இது லஞ்சம் அல்ல.  அவர்களில் சேவையின் அங்கீகாரமாக கொடுக்கப்படும் பணம் இது.  இப்போது அந்த நிலை தொடருகிறதா . இப்போது தபால் அனுப்புவதே குறைந்து விட்டதே . அப்படியே வந்தாலும்  எல் ஐ சி  பிரீமிய நோட்டீஸ் , டெலிபோன் கட்டண பில் , வங்கியில்  கிரெடிட் கார்டு வாங்கியிருந்தால் அதன் தவணை நோட்டீஸ்  சில வட்டி கடைகாரர்கள்  தங்களின் வாடிக்கையாளருக்கு தவணை ஞாபகப்படுதுதல்  போன்றவைதான் இருக்கும்.  தபால் காரரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.(ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம் )
மக்களும் அதே மூடில் தபாலை பெற்றுகொள்வார்கள்.

வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள் . சிவாஜி   எம் ஜி யார் ,  பத்மினி  சரோஜாதேவி , விநாயகர்  சரஸ்வதி , வெங்கடசலபதி, அரசியல்  தலைவர்கள்  காமராஜ்  அண்ணா கலைஞர்  படங்கள் போட்டது  சிறு குடும்பம் மாடு பொங்கல் கரும்புடன் நிற்பது என்று எண்ணற்ற வாழ்த்து அட்டைகள்.  அதனுள் ஒரு ரோஸ்  நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் ஒரு இணைப்புத்தாள் . அந்த இணைப்புத்தாளில்   நம் கையாலே பொங்கல் வாழ்த்தை எழுதி அனுப்பும்போது கிடக்கும் சுகம் இப்போது வருமா.  எங்களில் நிறைய பேர்  கவிதை என்ற பெயரில்  நிறைய கிறுக்கியது  எங்களை கவிஞனாக்கியது  பொங்கல் வாழ்த்து அட்டைகள் தானே.  தற்போது பிரான்சில் வசிக்கும்  .
நண்பர்களில் சிலர்  விடலை பருவத்தில்  தன்  மனதிர்க்கு  இனியவளின்  பெயருக்கு  அவள் விரும்பும்  படத்தை  பொங்கல் வாழ்த்தை கையெழுத்திடாமல்  அனுப்பி விட்டு  பிறகு என்ன ஆகுமோ  என்ற பதை பதிப்பில் தவித்த  தவிப்பை இன்று நினைத்தாலும் இனிக்கிறதே.  அந்த பெண்களோ  அந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டு நண்பர்கள் எதிரிலேயே  எழுதியவன் எதிரிலே இருப்பது அறியாமல்  ஒரு வேலை அவன் அனுப்பி இருப்பானோ இல்லை இவ ன் அனுப்பி இருப்பானோ  என்று சொல்லும்போது  அந்த நண்பர்களின் முகத்தில்  இரு வேறு உணர்வுகள் தோன்றும் ஒன்று அப்பாடா நம்மை கண்டுபிடிக்கவில்லை  என்ற சந்தோஷமும்  நம்மை தவிர எல்லோரையும் சொல்கிறார்களே  என்ற  எரிச்சலும்  ஒரு சேர  காட் டும் அந்த முகபாவம்  நடிகர் திலகத்திற்கு கூட வராது..  மாமா  பெரியப்பா சித்தப்பா அத்தை  மாமி
தூரத்து உறவினர்  என்று வாழ்த்து அட்டைகளை பெறும்போது உறவு சங்கிலிகள்  பலப்பட்டு இருந்தன . இப்போது  ???  டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது    வாழ்க்கைதரம்  உயர்ந்திருக்கிரதாக  நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால்  விலை மதிக்கமுடியாத சில சந்தோஷங்களை  இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது என்பதே உண்மை.    பழைய நெனப்புடா பேராண்டி  என்று சொல்லி  வாழ்த்து கூறி முடிக்கிறேன். 

1 comment:

  1. இனிமை... இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete